“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்ற வார்த்தைக்கு, “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்” என்ற அழகிய மொழிபெயர்ப்பைத் தந்தவர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
தினமும் நாம் ஓதுகின்ற திருமறைக் குர்ஆனை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்த பேரறிஞர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? உங்கள் பொன்னான நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்கி வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
திருமறைக் குர்ஆன் அருளப்பட்டு 13 நூற்றாண்டுகளாக தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு குர்ஆனின் தமிழாக்கம் கிடைக்கப் பெறவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம். அன்றைய காலகட்டத்தில் திருக்குர்ஆனை பிறிதொரு மொழிக்கு மொழியாக்கம் செய்வதே பாவம் என்ற கொள்கையில் தமிழக உலமாக்கள் இருந்தார்கள். அந்த அறியாமையை உடைத்து, அல்லாஹ்வின் வேதத்தை தமிழ் பேசும் பொதுமக்களிடம் தூய தமிழில் கொண்டு வந்தவர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
1876 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி பிறந்த அறிஞர் அவர்கள், வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் சேர்ந்து முதல் அணியில் மௌலவி பட்டம் பெற்றவராவார். 1906 ஆம் ஆண்டு மௌலவி பட்டம் பெற்றவுடன் சுயமாகத் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். அந்தத் தொழிலின் மூலம் கிடைத்த வருமானத்தில் “இஸ்லாமிய நூல் பிரசுரச் சங்கம்” எனும் பெயரில் ஓர் அச்சகத்தை நிறுவினார்கள். அந்த அச்சகத்தின் மூலம் பல இஸ்லாமிய நூல்களை வெளியிட்டார்கள்.
1926 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆனைத் தமிழாக்கம் செய்யும் உயர்ந்த பணியைத் துவக்கினார்கள். மூன்றாண்டு காலம் இடைவிடாத உழைப்பின் பின்னர், திருக்குர்ஆனின் முதல் பாகத்தின் மொழிபெயர்ப்பு அரபி மூலத்துடனும் விரிவுரையுடனும் 19.02.1929 ஆம் ஆண்டு வெளிவந்தது.
தான் மொழிபெயர்த்த குர்ஆனை எடுத்துக்கொண்டு அல்லாமா அப்துல் ஹமீது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எல்லா அரபி மத்ரஸாக்களுக்கும் பிரயாணம் செய்தார்கள். தனது மொழிபெயர்ப்பில் பிழை இருந்தால் சொல்லுங்கள் என ஒவ்வொரு மத்ரஸாவையும் நிர்ப்பந்தித்தார்கள். திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வரலாற்றில் இப்படி ஒரு பரந்த முயற்சி நடந்ததாக நான் அறியவில்லை.
“காபிர்களின் பாஷையான தமிழுக்கு வேதத்தை மொழிமாற்றம் செய்யக்கூடாது” எனும் மூடநம்பிக்கையில் வாழ்ந்த அன்றைய உலமாக்கள், அல்லாமா அவர்களின் தியாகத்தையும் தூரநோக்கையும் கண்டு வியந்து போனார்கள் என்றே சொல்லலாம். ஆனாலும் ஆலிம்களின் சதியும் பொறாமையும் அல்லாமாவைத் தொடர்ந்து வாட்டின.
அதன் பயனாக, அல்லாமா அவர்களின் மொழியாக்கத்தின் முதல் பாகம் வெளியிடப்பட்ட பிறகு, சமுதாயம் கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கும் வகையில் “இஸ்லாமிய நூல் பிரசுரச் சங்கம்” எனும் அவர்களின் அச்சகம் செயலிழந்து போனது. அறிஞர் அவர்களுக்கு அன்றைய அறிவிலிகள் “வஹ்ஹாபி” எனும் பட்டப்பெயரைச் சூட்டி அவர்களைத் தூற்ற ஆரம்பித்தார்கள்.
இஸ்லாமிய கருத்துப் புரட்சி செய்யும் நன்மக்கள் இவ்வாறு தூற்றப்படுவது வழக்கமானது. தான் மேற்கொண்ட அறப்பணியை நிறைவுக்குக் கொண்டு வருவதில் அல்லாமா அவர்கள் எண்ணற்ற சோதனைகளைச் சந்தித்தார்கள். 1938 ஆம் ஆண்டு வரை தமிழக உலமாக்கள் தக்க காரணமின்றி அல்லாமாவின் தர்ஜமாப் பணியை எதிர்த்து வந்தார்கள்.
இந்தக் காலகட்டத்தில் தமிழகத்திற்கு விஜயம் செய்த மார்க்க அறிஞர் ஷைகு அப்துல் காதிர் ஹழரத் என்பவர், பாகவி அவர்களை ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று நிஜாம் மன்னரின் மாமனாராகிய நவாப் நஸீர் யார் ஜங் பகதூருக்கு அறிமுகப்படுத்தினார். நவாப் சாஹிபின் பரிந்துரையால் மொழிபெயர்ப்பு மீண்டும் வெளிவரத் துவங்கியது.
தனது மொழிபெயர்ப்புப் பணிக்கு பணம் தேவைப்பட்டபோது அல்லாமா அப்துல் ஹமீது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இலங்கைக்கு வந்து தன்னந்தனியாக வசூல் செய்ய ஆரம்பித்தார்கள். அந்நாட்களில் கொழும்பு மாநகரில் வணிகப் பிரமுகராகவும் வழக்கறிஞராகவும் திகழ்ந்த என்.எம்.எம். ஹனீபா அவர்கள் இதற்கான முழுத் தொகையையும் கொடுத்திட முன் வந்தார்கள். அல்லாஹ் அன்னாரின் கப்ரை விசாலமாக்குவானாக!
அதன் பயனாக பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தமிழாக்கம் முப்பது ஜுஸ்உகளும் “தர்ஜமதுல் குர்ஆன் பி அல்-தஃபில் பயான்” எனும் பெயரில் முழுமையாக வெளிவர ஆரம்பித்தது. தர்ஜமாவுக்கு எதிராக ஆரம்பத்தில் போர்க்கொடி தூக்கியவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். பின்னர் மொத்த சமுதாயமும் மொழிபெயர்ப்பை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தது. கடுமையாக எதிர்த்த உலமாக்கள் அல்லாமாவின் மொழிபெயர்ப்பை விலை கொடுத்து வாங்கி வாசிக்க ஆரம்பித்தார்கள்.
தனது 17ஆம் வயதில் அல்லாஹ்வின் வேதத்தைத் தமிழாக்கம் செய்ய வேண்டுமென ஆசைப்பட்ட அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஆசை, அன்னார் 70 வயதை அடைந்தபொழுதே முழுமையாக நிறைவேறியது.
சுப்ஹானல்லாஹ்! அன்னாரின் இடைவிடாத முயற்சியும், தஃவாக் களத்தில் சோதனைகளைக் கண்டு அசராத தைரியமும் எம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.
அல்லாமா அவர்கள் அல்லாஹ்வின் வேதத்திற்காக அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டு, அவரே மொழிபெயர்த்த தர்ஜமாவுக்கு அவரே வசூல் செய்து, அவரே பிரிண்ட் பண்ணி, அவரே விற்ற அந்த முயற்சியும் புரட்சியுமானது மொழியாக்கத் துறையில் ஒரு சாதனையாகவே பார்க்கப்பட வேண்டியதாகும்.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விஷயமும் இருக்கின்றது. அதாவது இன்று “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” எனும் வார்த்தைக்கு “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்” என அதிகமானோர் அர்த்தம் செய்வதை நாமனைவரும் நன்கறிவோம். உலமாக்கள் உட்பட யாரும் இதில் விதிவிலக்கில்லை. ஆனால் இந்த அழகிய மொழிபெயர்ப்பை முதன் முதலில் செய்தவர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்தான் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும்.
தனது வாழ்நாளை அல்லாஹ்வின் வேதத்தை மொழியாக்கம் செய்வதிலும், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஐம்பது லட்சம் மக்களுக்கு அந்த மொழிபெயர்ப்பைக் கொண்டு போய்ச் சேர்ப்பிப்பதிலும் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த அந்தப் பேரறிஞரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!
அன்னாரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து சமுதாயக் காவலர்களுக்குப் படிப்பினையைத் தந்தருள்வானாக!
📷 Photo Gallery
Use arrows to browse · Click to view full size





